செய்திகள்
ஜோ பைடன்

ஜோ பைடனின் அதிகார மாற்று ஆய்வு குழுக்களில் 20 இந்தியர்களுக்கு இடம்

Published On 2020-11-12 00:23 GMT   |   Update On 2020-11-12 00:23 GMT
ஜோ பைடனின் அதிகார மாற்று ஆய்வு குழுக்களில் இந்திய வம்சாவளியினர் 20 பேர் இடம் பிடித்துள்ளனர். அவர்களில் 3 பேர் குழுக்களின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக வருகிற ஜனவரி 20-ந் தேதி பதவியேற்கிறார்.

இதையொட்டி தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்திடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை ஜோ பைடனுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக ஜோ பைடன் தரப்பில் அதிகார மாற்று குழு அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் சீரான அதிகார மாற்றத்தை உறுதி செய்ய தற்போதைய நிர்வாகத்தில் உள்ள முக்கிய கூட்டாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய ஏ.ஆர்.டி. என்று அழைக்கப்படும் அதிகார மாற்று ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழுக்களில் இந்திய வம்சாவளியினர் 20 பேர் இடம் பிடித்துள்ளனர். அவர்களில் 3 பேர் குழுக்களின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருண் மஜும்தர் எரிசக்தி துறைக்கான ஏ.ஆர்.டி. குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் ராகுல் குப்தா என்பவர் தேசிய மருந்து கட்டுப்பாட்டு கொள்கைக்கான ஏ.ஆர்.டி குழுவின் தலைவராகவும், கிரன் அஹுஜா என்பவர் பணியாளர் மேலாண்மை அலுவலகத்துக்கான ஏ.ஆர்.டி. குழுவின் தலைவராகும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை தவிர தேசிய பாதுகாப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, வங்கி நிர்வாகம் உள்ளிட்ட 17 துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இந்திய வம்சாவளியினர் 17 பேர் அந்தந்த துறைக்கான ஏ.ஆர்.டி குழுவின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் இந்த ஏ.ஆர்.டி. குழுக்களின் உறுப்பினர்களில் பாதிக்கும் அதிகமானோர் பெண்கள் என்றும் கருப்பினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஓரினச்சேர்க்கையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இந்தக் குழுக்களில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஜோ பைடனின் அதிகார மாற்று குழு தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News