செய்திகள்
ஆப்கானிஸ்தான்: தலிபான்கள் பீரங்கி தாக்குதல் - பொதுமக்கள் 8 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் சிறிய ரக பீரங்கிகள் மூலம் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட பொதுமக்கள் 8 பேர் உயிரிழந்தனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே 19 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது. அதன் பயனாக தலிபான்கள் - ஆப்கானிஸ்தான் அரசு இடையே கத்தார் நாட்டில் வைத்து அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அமைதி பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் வந்தாலும் தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தங்கள் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் ஹாஸ்னி மாகாணத்தின் நவ் அபட் பகுதியில் உள்ள குடியிருப்பை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் இன்று மோர்டர் எனப்படும் சிறிய ரக பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தினர். 3 பீரங்கி தாக்குதல்கள் குடியிருப்பு பகுதி மீது விழுந்தது.
இந்த தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 8 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.
அதேபோல், காந்தகார் மாகாணத்தில் தலிபான்கள் மறைத்துவைத்திருந்த சாலையோர கண்ணிவெடி வெடித்ததில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் வெடித்து சிதறியது. இந்த தாக்குதலில் 2 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.