செய்திகள்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

தீபாவளியில் இருளை ஒளி வெல்வது போல் நாம் ஒன்றிணைந்து கொரோனாவை வெல்வோம் - இங்கிலாந்து பிரதமர்

Published On 2020-11-07 18:57 GMT   |   Update On 2020-11-07 18:57 GMT
தீபாவளியில் இருளை ஒளி வெல்வது போல நாம் ஒன்றிணைந்து கொரோனாவை வெல்வோம் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
லண்டன்:

இந்தியாவில் வருகிற 14-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் மக்கள் புத்தாடைகளை உடுத்தி, ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி, பட்டாசுகளை வெடித்து உற்சாகமாக தீபாவளியை கொண்டாடுவார்கள்.

இந்தியாவை போலவே உலகில் முக்கியமான பல நாடுகளில் தீபாவளி உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று.

இங்கிலாந்தில் இந்தியர்கள் அதிக அளவில் உள்ளதால் அங்கு உற்சாகத்துடன், பட்டாசுகள் வெடித்தும், வீடுகளை அலங்கரித்தும், நண்பர்களுக்கு பரிசுப்பொருட்கள் அளித்தும் தீபாவளியை கொண்டாடுகிறார்கள். அங்கு தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். மேலும் இந்தியர்களின் கலாசாரத்தை போற்றும் வகையிலும், இங்கிலாந்தில் உள்ள இந்தியர்களை மகிழ்விக்கும் வகையிலும் அரசு சார்பில் ‘உலக தீபாவளி திருவிழா’ என்கிற விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்தில் தற்போது கொரோனா பரவல் காரணமாக 2-வது முறையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ‘உலக தீபாவளி திருவிழா 2020’ கொண்டாட்டங்கள் காணொலி காட்சி வாயிலாக நடக்கிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் தீபாவளியில் இருள் மீது ஒளி வெற்றி பெறுவது போல் நாம் ஒன்றிணைந்து கொரோனாவை வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்தார். இது குறித்து அவர் பேசியதாவது:-

சந்தேகத்துக்கு இடமின்றி பெரிய சவால்கள் உள்ளன என்றாலும் நாடு முழுவதும் உள்ள மக்களின் உறுதி மற்றும் நல்ல உணர்வு ஆகியவற்றில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இருள் மீது ஒளி வெற்றி பெறுகிறது; தீமை அழிகிறது; அறியாமை அகலுகிறது; என்பதை தீபாவளி நமக்கு கற்பிப்பதை போலவே நாம் ஒன்றாக சேர்ந்து இந்த வைரசை வெல்வோம்.

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் இந்த ஆண்டு மக்கள் தீபாவளியை கொண்டாடுவதில் சிரமப்படுவார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதேசமயம் உங்கள் தியாகங்களும் சரியானதை செய்வதற்கான உங்கள் உறுதியும் உண்மையில் உயிர்களை காப்பாற்ற உதவுகின்றன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் வாழும் கலை நிறுவனர் ரவிசங்கரின் ஆன்மிக அமர்வு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பஜனைகள், பிரபல இங்கிலாந்து இந்திய இசைக்கலைஞரின் பாலிவுட் இசை நிகழ்ச்சி ஆகியவற்றுடன் நடனம் மற்றும் யோகா ஆகியவையும் இடம் பெறுகின்றன.

மேலும் இங்கிலாந்து இந்திய சமூக சாம்பியன்களை கவுரவிக்கும் விருது வழங்கும் விழாவும் இதில் அடங்கும்.
Tags:    

Similar News