செய்திகள்
ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் - செய்தி வர்ணனையாளர் உள்பட 3 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் இன்று நடந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் முன்னாள் செய்தி வர்ணையாளர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே 19 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப்போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.
ஆனாலும் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவின் உதவியுடன் தலிபான்கள் - ஆப்கானிஸ்தான் அரசு இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அமைதி பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் வந்தாலும் தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தங்கள் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், அந்நாட்டின் பிரபல செய்தி நிறுவனமான ’டோலோ செய்தி’ நிறுவனத்தில் செய்தி வர்ணனையாளராக பணியாற்றி வந்தவர் யமா சைவாஷ். இவர் சமீபத்தில் தனது செய்தி வர்ணனையாளர் பணியில் இருந்து விலகி ஆப்கானிஸ்தான் சென்ட்ரல் வங்கியின் ஆலோசகர் பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில், காபுல் மாகாணத்தில் உள்ள யமா சைவாஷ் வீட்டில் உள்ள அவரது காரில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரப்பியுள்ளனர். அந்த காரில் இன்று யமா வெளியே சென்றபோது வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் வெடித்து சிதறியது. இந்த வெடிவிபத்தில் யமா சைவாஷ் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் தலிபான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.