செய்திகள்
ஜோ பைடனும், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் தங்களின் ஆதரவாளர்களை நோக்கி கையசைத்த காட்சி.

நாளை ஜனாதிபதி தேர்தல் : அமெரிக்காவில் டிரம்ப் - ஜோ பைடன் இறுதிகட்ட பிரசாரம்

Published On 2020-11-01 19:34 GMT   |   Update On 2020-11-01 19:34 GMT
அமெரிக்காவில் நாளை ஜனாதிபதி தேர்தல் நடக்கும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளரான டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வாஷிங்டன்:

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாக விளங்கும் அமெரிக்காவில் நாளை (செவ்வாய்க்கிழமை)ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நடைபெறும் இந்த தேர்தல் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட, அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் களம் காண்கிறார்.

கொரோனா வைரஸ், இனப்பாகுபாடு ஆகிய விவகாரங்கள் இந்த தேர்தலில் முக்கிய பிரச்சினைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தேர்தல் நடந்தாலும் கடந்த காலங்களை ஒப்பிடுகையில் அமெரிக்க மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்கு மிகுந்தஆர்வம் காட்டிவருகின்றனர்.

அந்தவகையில் 8 கோடியே 50 லட்சம் பேர் முன்கூட்டியே தங்கள் வாக்கை செலுத்தினர். அதைப்போல் தேர்தல் நாளன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய மாகாணமாக விளங்கும் பென்சில்வேனியாவில் 4 பிரசார பேரணிகளில் ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதேபோல் மற்றொரு முக்கிய மாகாணமான மிச்சிகனில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 2 பிரசார பேரணிகளில் பங்கேற்றார். இந்தப் பேரணிகளில் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் கலந்து கொண்டு ஜோ பைடனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

ஜோ பைடனின் பிரசார பேரணிகள் மிக சிறிய அளவிலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்பட்டும் நடந்தன. ஆனால் ஜனாதிபதி டிரம்பின் பிரசார பேரணிகள் மிக பிரமாண்டமாகவும், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இன்றியும் நடைபெற்றன.

இதனிடையே பென்சில்வேனியாவில் ஒரு பேரணியில் பேசிய டிரம்ப், நடக்க இருக்கும் இந்த தேர்தலில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிக அளவிலான வாக்குகளை கைப்பற்றி குடியரசு கட்சி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “இது மிகவும் சுவாரஸ்யமான செவ்வாய்க்கிழமையாக இருக்கப்போகிறது. நம்மிடம் ஒரு பெரிய சிவப்பு அலை உருவாகியுள்ளது. இது போன்ற எதையும் யாரும் பார்த்ததில்லை” என கூறினார்.

மேலும் அவர் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் தான் பெற்ற வாக்குகளை விட இம்முறை அதிக அளவு வாக்குகளை பெறுவேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதேபோல் மிச்சிகனில் நடந்த பிரசார பேரணியில் பேசிய ஜோ பைடன் ஜனாதிபதி டிரம்ப் கடந்த 4 ஆண்டுகளில் நாட்டை பிளவுபடுத்தியதாவும், எனவே அவரை வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்ற மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் எனவும் கூறினார்.

பிரசாரத்தில் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா பேசுகையில், ஜனாதிபதி டிரம்ப் கொரோனா வைரஸ் தொற்றின் குறிப்பிடத்தக்க சிக்கலை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் தனது தற்பெருமைக்கு தீனி போடுவதை தவிர மற்ற விஷயங்களைப் பற்றி கவலைப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
Tags:    

Similar News