செய்திகள்
துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு
துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்தான்புல்:
துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 என பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்பு சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது. இங்கு 20-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து முற்றிலும் சேதடைந்தன.
கட்டிட இடிபாடுகளில் சிக்கி 22 பேர் உயிரிழந்ததாகவும், 700க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் துருக்கி அரசு தெரிவித்தது.
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
துருக்கியில் நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளன்ர்.
இந்நிலையில், துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என அம்மக்களுக்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.