செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா நோயாளிகளுக்கு ‘ஆன்டிபாடி’ சிகிச்சை பலன் அளிக்கிறது - அமெரிக்க ஆய்வில் கண்டுபிடிப்பு

Published On 2020-10-31 19:58 GMT   |   Update On 2020-10-31 19:58 GMT
கொரோனா நோயாளிகளுக்கு ஆன்டிபாடி சிகிச்சை பலன் அளிப்பது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ்:

கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றி, இப்போது உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி விட்டது. உலமெங்கும் 4.56 கோடி பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். 11.89 லட்சம் பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகியும் உள்ளனர்.

இன்றளவும் கொரோனாவுக்கு தகுந்த சிகிச்சை கண்டுபிடிக்கப்படவில்லை.

தடுப்பூசிகள்தான் உருவாக்கப்பட்டு மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவில் சிடார்ஸ்-சினாய் மருத்துவ மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டவர்கள் ஒரு ஆய்வு நடத்தி உள்ளனர்.

கொரோனா நோயாளிகளுக்கு புதிய ‘ஆன்டிபாடி’ (நோய் எதிர்ப்பு பொருள்) ஒன்றை அளிக்கிறபோது, அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவது, அவசர மருத்துவ சிகிச்சை அளிப்பது குறைகிறது என்று அவர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பான 2-வது கட்ட மருத்துவ பரிசோதனையின் தற்காலிக முடிவுகளை அவர்கள் ‘தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசின்’ பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.

கொரோனாவில் இருந்து மீட்கப்பட்ட நோயாளியின் ரத்தத்தில் இருந்து பெறப்பட்ட மோனோக்ளோனல் ஆன்டிபாடியான ‘எல்.ஒய்.கோவ் 555 ஆன்டிபாடி’யை 3 வெவ்வேறு அளவுகளில் கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தி சோதித்து இருக்கிறார்கள்.

அதில் 2,800 மி.கி. அளவுக்கு அந்த ஆன்டிபாடியை கொரோனா நோயாளிகளுக்கு செலுத்துகிறபோது, அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படும் விகிதம் குறைகிறது. எல்லா அளவும் தருகிறபோது, அவசர சிகிச்சை பெற வேண்டிய வாய்ப்பு குறைகிறது என தெரிய வந்துள்ளது.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான சிடார்ஸ்-சினாய் மருத்துவ மையத்தை சேர்ந்த பீட்டர் சென் கூறும்போது, “ என்னைப் பொறுத்தமட்டில், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவதை குறைப்பதே மிக முக்கியமான கண்டுபிடிப்பு ஆகும். இதுபோன்ற மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள், கொரோனா நோயாளிகள் பலருக்கும் நோயின் தீவிரத்தை குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. மேலும் அதிகமான மக்கள் வீட்டிலேயே குணம் அடையச்செய்ய அனுமதிக்கிறது” என குறிப்பிட்டார்.

இந்த ஆன்டிபாடியானது, வைரசுடன் இணைந்து, அவை நகல் எடுப்பதை தடுக்கின்றன. குறிப்பாக நகலெடுக்கும் செயல்முறையை மெதுவாக்கி, நோயாளிகள் தங்கள் சொந்த நோய் எதிர்ப்புச்சக்தியின் வாயிலாக கொரோனாவுக்கு எதிராக போராடச்செய்கிறது.

இதுபற்றி பீட்டர் சென் மேலும் கூறும்போது, “ ஆன்டிபாடி அளிப்பதின்மூலம் வைரஸ் அதிக சேதத்தை ஏற்படுத்துவதை ஆரம்பத்தில் தடுத்து விடுகிறோம். இதன்மூலம் கொரோனா நோயாளிகள், வைரசை எதிர்த்து போராடுவதற்கு தங்கள் சொந்த நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்கத்தொடங்குகின்றனர்” என குறிப்பிட்டார்.

இந்த ஆய்வின்போது, 2,800 மி.கி. ஆன்டிபாடி பெற்ற கொரோனா நோயாளிகளின் கொரோனா வைரஸ் அளவு குறைந்துள்ளது. ஆன்டிபாடி கொடுக்கப்பட்ட 11-வது நாளில் பெரும்பாலான நோயாளிகளுக்கு வைரஸ் சுமை கணிசமாக குறைந்து விட்டது.

இந்த ஆய்வில் 300 நோயாளிகள் ‘ஆன்டிபாடி’ பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News