செய்திகள்
பயங்கரவாத தாக்குதல் நடந்த தேவாலய பகுதி

பிரான்ஸ்: தேவாலயத்தில் கத்தி குத்து தாக்குதல் - பெண் உள்பட 3 பேர் பலி

Published On 2020-10-29 10:17 GMT   |   Update On 2020-10-29 10:17 GMT
பிரான்சில் தேவாலயத்தில் நுழைந்த பயங்கரவாதி நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஒரு பெண் தலைதுண்டித்து கொல்லப்பட்டார்.
பாரிஸ்:

பிரான்ஸ் நாட்டின் பிரபல பத்திரிக்கையான சார்லி ஹேப்டோவில் வெளிவந்த நபிகள் நாயகத்தின் கேளிச்சித்திரத்தை பள்ளி வகுப்பில் மாணவர்களிடம் காட்டிய பாரிஸ் நகரை சேர்ந்த வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெடி கடந்த 16-ம் தேதி தலைதுண்டித்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அதன்பின் கேலிச்சித்திரங்களை காட்டியதால் தலைதுண்டித்து கொல்லப்பட்ட சாமுவேலின் அஞ்சலி நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் பங்கேற்றார்.

அப்போது பேசிய அதிபர் இம்மானுவேல்,’கேலிச்சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப்போவதில்லை’ என தெரிவித்தார். ஆனால், இம்மானுவேலின் கருத்துக்கு துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. 

இதையடுத்து, பிரான்சுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்தது. குறிப்பாக துருக்கி இந்த விவகாரத்தில் பிரான்சை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

துருக்கி அதிபர் எர்டோகனை விமர்சித்து சார்லி ஹேப்டோ சமீபத்தில் கேலிக்கை சித்திரம் ஒன்றை வெளியிட்டது. இதற்கு பதிலடியாக ஈரானை சேர்ந்த பத்திரிக்கை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேலை அரக்கனாக சித்தரித்து கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டது. 

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் நோட்ரி டேமி என்ற கிருஸ்தவ தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தேவாலயத்திற்குள் இன்று மதியம் கத்தியுடன் நுழைந்த மர்மநபர் அங்கு இருந்தவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினான். தன் கண்ணில் பட்டவர்களை எல்லாம் அந்த நபர் கத்தியால் கொடூரமாக தாக்கினான்.  

இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் தேவாலயத்தில் இருந்து தப்பிச்செல்ல முற்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பிரான்ஸ் போலீசார் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனர். மேலும், இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என அறிவித்தனர்.

பயங்கரவாதி நடத்திய இந்த கொடூர கத்திக்குத்து 3 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஒரு பெண்ணை தலைத்துண்டித்து கொலை செய்துள்ளான். மேலும், இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர்.

நபிகள் நாயகத்தின் கேளிச்சித்திரத்தை பள்ளி வகுப்பில் மாணவர்களிடம் காட்டிய வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெடியின் செயலுக்கு தண்டனை கொடுக்கும் விதமாகவே இந்த தாக்குதலை நடத்தியதாக பயங்கரவாதி தெரிவித்துள்ளான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக 2016 ஆம் ஆண்டு இதே நைஸ் நகரில் பொதுமக்கள் மீது கண்டெய்னர் லாரியை மோதச்செய்து தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலில் 86 பேர் உயிரிழந்தனர். மேலும் 458 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News