செய்திகள்
ஜெனரல் பாஜ்வா, அபிநந்தனன், குரேஷி

’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்

Published On 2020-10-29 00:56 GMT   |   Update On 2020-10-29 00:56 GMT
’அபிநந்தன் குறித்த விவாத கூட்டத்திற்கு வந்த பாகிஸ்தான் ராணுவ தளபதியின் கால்கள் நடுங்கின...அவருக்கு வியர்த்து ஊற்றியது' என பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.
இஸ்லாமாபாத்:

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா தாக்குதல் நடத்தியது.

இதில் பயங்கரவாதிகளின் மூன்று பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. சுமார் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்தியாவின் இந்த தாக்குதலால் கடும் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் மறுநாள் (2019 பிப்ரவரி 27) காஷ்மீருக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்றது. உடனே பாகிஸ்தானின் போர் விமானங்களை இந்திய 
விமானப்படை விரட்டி அடித்தது. அப்போது பாகிஸ்தான் எப்-16 வகை போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்த சண்டையின் போது இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் விமானம் பழுதடைந்தது. இதனால் அபிநந்தன் பாராசூட்டில் குதித்து உயிர் தப்பினார். காற்றின் வேகம் காரணமாக அவரது பாராசூட் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்டது. இதை பயன்படுத்தி அவரை போர் கைதியாக பாகிஸ்தான் சிறை பிடித்தது.

அபிநந்தனை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்தது . அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளும் பாகிஸ்தானை எச்சரித்தன. இந்த அழுத்தம் காரணமாக மார்ச் 1-ந்தேதி அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையில், அபிநந்தன் தங்கள் பிடியில் இருந்த போது இவ்விவகாரம் குறித்து பாகிஸ்தான் அதிகாரிகளின் உயர்மட்டத்திலான அவசர ஆலோசனை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் ஒமர் ஜாதவ் பாஜ்வா, வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி உள்பட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். 

ஆனால், அந்த கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்கவில்லை. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னரே அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் சம்பதம் தெரிவித்தது.  

இந்நிலையில், அந்த கூட்டத்தில் என்ன நடந்தது, எவை எவை விவாதிக்கப்பட்டது என்பது குறித்து அக்கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவர் அயாஸ் சாதிக் தற்போது நினைவு கூர்ந்துள்ளார். 

இது தொடர்பாக நேற்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் அயாஸ் சாதிக் கூறியதாக பாகிஸ்தான் செய்தி ஊடகமான டம்யா நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:-

அயாஸ் சாதிக் கூறியதாக வெளியான செய்தியில், ‘ இம்ரான்கான் பங்கேற்க மறுத்த கூட்டத்தில் (அபிநந்தன் குறித்த கூட்டம்) ஷா முகமது குரேஷி பங்கேற்றது எனக்கு (அயாஸ் சாதிக்) நன்றாக நினைவு இருக்கிறது. கூட்டம் நடைபெறும் அறைக்குள் ராணுவ தளபதி ஜெனரல் பாஜ்வா வந்தார். அப்போது அவரது கால்கள் நடுங்கின. அவரின் உடல் நடுங்கியது. அவருக்கு வியர்த்து ஊற்றியது...

மேலும், அப்போது பேசிய வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி அவரை (அபிநந்தனை) இப்போது விட்டுவிடுவோம்.. இல்லையேல் பாகிஸ்தான் மீது சரியாக 9 மணியளவில் இந்தியா தாக்குதல் நடத்தும் என்றார்.

என சாதிக் கூறினார்.   
Tags:    

Similar News