செய்திகள்
கோப்புப்படம்

சீன நகரில் அறிகுறியே இல்லாமல் தொற்று உறுதி - 3 நாட்களில் 47 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-10-26 20:23 GMT   |   Update On 2020-10-26 20:23 GMT
சீன நகரில் அறிகுறியே இல்லாமல் பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த நகரின் ஒட்டுமொத்த மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணியில் அரசு இறங்கியுள்ளது.
பீஜிங்:

சீன நகரம் ஒன்றில் அறிகுறியே இல்லாமல் பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த நகரின் ஒட்டுமொத்த மக்கள் தொகையான 47 லட்சம் பேருக்கும் 3 நாட்களுக்குள் கொரோனா பரிசோதனை செய்யும் பணியில் அரசு இறங்கியுள்ளது.

ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் உயிர் கொல்லி கொரோனா வைரஸ் சீனாவின் ஹூபெய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றியது.

அதன் பின்னர் இந்த வைரஸ் நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் கடந்து தற்போது ஒட்டுமொத்த உலகத்திலும் பரவி கிடக்கிறது.

வலுவான சுகாதார கட்டமைப்பை கொண்ட நாடுகளும் கூட கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வரும் சூழலில், கொரோனாவின் பிறப்பிடமான சீனா அதன் பாதிப்பில் இருந்து பெருமளவு மீண்டுவிட்டது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் சீனா மிகப்பெரிய வெற்றியை கண்டிருந்தாலும், அங்கு கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்கிவிடவில்லை.

இந்த நிலையில் சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணம் காஷ்கர் நகரில் ஆடை தொழிற்சாலையில் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை அறிகுறிகளே இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அந்த இளம் பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்ததில் 137 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து காஷ்கர் நகரின் மொத்த மக்கள் தொகையான 47 லட்சம் பேருக்கும் 3 நாட்களில் கொரோனா பரிசோதனை செய்ய மாகாண அரசு முடிவு செய்தது.

இதற்காக நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் திறக்கப்பட்டு இரவு, பகலாக பரிசோதனை நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் மதியம் வரை 28 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

எஞ்சிய 19 லட்சம் பேருக்கும் நாளைக்குள் கொரோனா பரிசோதனை நடத்தி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்கர் நகரில் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்படும் வரை மக்கள் யாரும் நகரை விட்டு வெளியேறக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான கிங்டாவோவில் புதிதாக 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து 5 நாட்களில் 90 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.
Tags:    

Similar News