செய்திகள்
பாதுகாப்பு பணியில் ராணுவம் (கோப்பு படம்)

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் திடீர் தாக்குதல்- 20 ராணுவ வீரர்கள் பலி

Published On 2020-10-23 08:15 GMT   |   Update On 2020-10-23 08:15 GMT
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனால் ராணுவம் மற்றும் காவல்துறையை குறிவைத்து தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்துகின்றனர். 

வன்முறை தாக்குதலை குறைப்பதுடன் அமைதி ஒப்பந்தம் செய்ய வேண்டும் என சர்வதேச சமூகமும், ஆப்கானிஸ்தான் மக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அமைதி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் வன்முறையும் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், நிம்ரோஸ் மாகாணத்தின் காஷ்ராட் மாவட்டத்தில் நேற்று மாலை ராணுவத்தை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். சோதனைச்சாவடி மீது நடத்தப்பட்ட இந்த திடீர் தாக்குதலில் 20 வீரர்கள் உயிரிழந்ததாக மாவட்ட ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும் 6 பேரை தலிபான்கள் சிறைப்பிடித்து சென்றதாகவும் அவர் கூறினார்.

புதன்கிழமை இரவு தலிபான்களை குறிவைத்து தக்கார் மாகாணத்தில் நடத்தப்பட்ட ராணுவ தாக்குதலில் 12 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.
Tags:    

Similar News