செய்திகள்
அமெரிக்காவின் வாழ்க்கை முறையை தீவிர இடதுசாரிகள் அழித்துவிடுவார்கள் -டிரம்ப் பிரச்சாரம்
அமெரிக்க வாழ்க்கை முறையை அழிக்க வேண்டும் என்பதே தீவிர இடதுசாரிகளின் திட்டம் என தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜனநாயக கட்சியினரை டிரம்ப் விமர்சித்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பதவிக்காலம் வருகிற நவம்பருடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 3ந்தேதி நடைபெற உள்ளது. அதிபர் பதவிக்கு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் களமிறங்கி உள்ளார்.
இரு கட்சியினரும் தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இதில், ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தின் சென்னையை சேர்ந்த இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். ஜோ பிடனுக்கே மக்கள் ஆதரவு அதிகமாக இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தலைவர்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், மிச்சிகன் மாநிலம் மஸ்கேகானில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் தனது ஆதரவாளர்களிடையே பேசிய டிரம்ப், ஜனநாயக கட்சியினரை விமர்சித்தார். அடிமைத்தனத்துடன் தொடர்புடைய வரலாற்று நபர்களின் சிலைகளை அகற்றுவதற்கான முயற்சிகள் தொடர்பாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்தார்.
‘அமெரிக்க வரலாற்றை அழிக்க வேண்டும், அமெரிக்க மதிப்புகளை கெடுக்க வேண்டும், அமெரிக்க வாழ்க்கை முறையை அழிக்க வேண்டும் என்பதே தீவிர இடதுசாரிகளின் திட்டம். அதைத்தான் அவர்கள் செய்ய முயற்சிக்கிறார்கள். ஜோ பிடனுக்கு எதிரான போட்டியில் உள்ள முக்கியமான பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.
நமது அற்புதமான பாரம்பரியத்தை நாம் பாதுகாக்கிறோமா அல்லது தீவிர இடதுசாரிகள் அனைத்தையும் அழிக்க அனுமதிக்கிறோமா? என்பதை இந்தத் தேர்தல் தீர்மானிக்கும்’ என டிரம்ப் கூறினார்.