செய்திகள்
டிரம்ப்

உலகளாவிய காற்று மாசுபாட்டுக்கு இந்தியா போன்ற நாடுகளே காரணம் - டிரம்ப் குற்றச்சாட்டு

Published On 2020-10-17 18:23 GMT   |   Update On 2020-10-17 18:23 GMT
உலகளாவிய காற்று மாசுபாட்டுக்கு இந்தியா போன்ற நாடுகளே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டிருக்கும் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், இதில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் நேற்று முன்தினம் வடக்கு கரோலினாவில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது உலகளாவிய பருவநிலை மாற்றம் குறித்து பேசிய டிரம்ப், இந்தியா, சீனா, ரஷியா போன்ற நாடுகளை கடுமையாக குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நாம் சிறந்த சுற்றுச்சூழல் எண்கள், ஓசோன் எண்கள் மற்றும் ஏராளமான பிற எண்களை கொண்டிருக்கிறோம். அதேநேரம் சீனா, ரஷியா, இந்தியா போன்ற நாடுகள் காற்றை மாசுபடுத்துகின்றன. எனது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா தனது அசல் சுற்றுச்சூழலை பாதுகாத்தவாறே, எரிசக்தி சுதந்திரத்தையும் பெற்று இருக்கிறது.

சுத்தமான காற்றை நான் நேசிக்கிறேன் என எனது மக்களிடம் நான் தொடர்ந்து கூறிக்கொண்டு இருக்கிறேன். ஆனால் மாசுபாடு நிறைந்த வரைபடத்தை நீங்கள் பார்க்கிறீர்கள். ரஷியா, சீனா, இந்தியா போன்ற நாடுகளே அதை தூண்டுகின்றன. இதற்கு நீங்கள் என்ன பரிந்துரைக்கிறீர்கள்?

பிளாஸ்டிக்குக்கு பதிலாக காகிதத்தை பயன்படுத்த கூறுபவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்கள். இனி நீங்கள் ஸ்ட்ராவை விற்க வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் பிளாஸ்டிக் தட்டை பற்றி என்ன கூறுகிறீர்கள்? பிளாஸ்டிக் அட்டைப்பெட்டியை பற்றி என்ன கூறுகிறீர்கள்? பிளாஸ்டிக் டம்ளரைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்? சரி அதைப்பற்றி பிறகு பார்ப்போம்.

அமெரிக்கர்களுக்கு பதிலாக வெளிநாட்டு பணியாளர்களை நியமித்ததால் டென்னசி வாலி ஆணைய தலைவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். உங்களை பணிநீக்கி இருக்கிறேன் என அந்த வாரிய தலைவரிடம் தெரிவித்தேன். உடனே டென்னசி மற்றும் 5 மாநிலங்களை சேர்ந்த பணியாளர்கள் திரும்ப வந்து விட்டனர். இதன் மூலம் நமக்காக சிறிய விஷயங்களை செய்திருக்கிறோம்.

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய 1.10 கோடி பேருக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று கூறியிருக்கும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் திட்டம், அமெரிக்க வரலாற்றில் மிகவும் மோசமானது.

இவ்வாறு டிரம்ப் பேசினார்.

தேர்தல் பிரசாரத்தில் இந்தியாவை டிரம்ப் குற்றம் சாட்டியிருக்கும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் காற்று மாசுபாடு தொடர்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகளை டிரம்ப் குற்றம் சாட்டுவது இது முதல் முறையல்ல. கடந்த 2017-ம் ஆண்டு பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அவர் வெளியேறும்போதும், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

குறிப்பாக இந்த ஒப்பந்தம் அமெரிக்காவை கடுமையாக பாதிக்கும் என கூறிய டிரம்ப், இந்த ஒப்பந்தத்தால் இந்தியா, சீனா போன்ற நாடுகள்தான் பலன் பெறும் எனவும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News