செய்திகள்
டுவிட்டர்

உலகம் முழுவதும் சிறிது நேரம் முடங்கிய டுவிட்டர் -நெட்டிசன்கள் டென்ஷன்

Published On 2020-10-16 03:12 GMT   |   Update On 2020-10-16 03:12 GMT
டுவிட்டர் சிறிது நேரம் முடங்கியதில் பாதுகாப்பு மீறலோ அல்லது ஹேக் செய்யப்பட்டதற்கான ஆதாரமோ இல்லை என டுவிட்டர் நிறுவனம் கூறி உள்ளது.
வாஷிங்டன்:

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் நேற்று பிற்பகல் முடங்கியது. பயனர்கள் டுவிட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்கனவே வந்த தகவல்களையும் பார்க்க முடியவில்லை. திரும்பத் திரும்ப டுவிட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டும் பலன் அளிக்கவில்லை. இதனால் நெட்டிசன்கள் டென்ஷன் அடைந்தனர். 

ஹேக்கர்கள் டுவிட்டரை முடக்கியிருக்கலாம் என பலரும் கருத்து பதிவிட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு டுவிட்டர் செயல்பட தொடங்கியது. 

இதுபற்றி டுவிட்டர் நிறுவனம் கூறுகையில், ‘பயனர்களில் பலருக்கு டுவிட்டர் செயல் இழந்திருக்கும். எங்கள் உள் அமைப்புகளில் நாங்கள் செய்த கவனக்குறைவான மாற்றம் காரணமாக சிக்கல் ஏற்பட்டது. தற்போது பிரச்சினை சரி செய்யப்பட்டுவிட்டது. இதுபற்றி விசாரணை நடத்தப்படுகிறது. பாதுகாப்பு மீறல் அல்லது ஹேக் செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை’ என டுவிட்டர் விளக்கம் அளித்துள்ளது.

இதேபோல் கடந்த பிப்ரவரி மாதமும் டுவிட்டர் சில மணி நேரம் முடங்கி, பின்னர் செயல்படத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் பெரும்பாலான அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், முக்கிய பிரமுகர்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைத்து தரப்பினரும் டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். அரசியல் தலைவர்கள தங்கள் கருத்துக்களை இப்போது பெரும்பாலும் டுவிட்டர் மூலமாகவே கூறுகின்றனர். தகவல் வேகமாக உலகம் முழுவதும் சென்றடைவதால் பலரும் டுவிட்டரை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News