செய்திகள்
அர்மீனியா-அசர்பைஜான் மோதலில் பாதிக்கப்பட்ட பகுதி

அர்மீனியா-அசர்பைஜான் மோதல் - பலி எண்ணிக்கை 500-ஐ கடந்தது

Published On 2020-10-14 00:26 GMT   |   Update On 2020-10-14 00:26 GMT
அர்மீனியா மற்றும் அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே நடைபெற்றுவரும் மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளது
யெரிவன்: 

அர்மீனியா, அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான எல்லையாக பிரிக்கும் பகுதியில் நகோர்னோ-கராபத் என்ற மாகாணம் அமைந்துள்ளது. 

இந்த மாகாணம் அசர்பைஜானின் பகுதி என சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாகாணத்தில் பெரும்பான்மையானோர் அர்மீனிய ஆதரவாளர்கள் ஆகும். 1994-ம் ஆண்டு இரு நாடுகளும் இடையே நடந்த போரில் இந்த மாகாணத்தின் பெரும் பகுதியை அர்மீனியா கைப்பற்றியது.

மேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனிய ஆதரவு மக்கள் நிர்வகித்து வந்தனர். மேலும், இதற்கு அர்மீனிய அரசும் உதவிகளை செய்துவந்தது. 

அன்றில் இருந்து நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையமாக கொண்டு பல ஆண்டுகளாக அர்மீனியா - அசர்பைஜான் இடையே மோதல்கள் அரங்கேறி வருகிறது. 

இதற்கிடையில், பல ஆண்டுகளாக சற்று தணிந்திருந்த பதற்றம் கடந்த மாதம் 27 முதல் மீண்டும் தொடங்கியது.

தங்கள் வசம் இருந்த நகோர்னோ - கராபத் மாணத்தை முழுவதும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு அசர்பைஜான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு அர்மீனிய ஆதரவு படையினர் பதில் தாக்குதல் கொடுத்தும் வந்தனர்.

இந்த மோதலில் அசர்பைஜானுக்கு துருக்கி ஆயுதம் வழங்கியும், சிரியா, லிபியாவில் உள்ள கிளர்ச்சியாளர்களை சண்டையில் களமிறக்கியும் நேரடி உதவி செய்து வருகிறது. நோர்னோ-கராபாத் மாகாண மோதலில் துருக்கியின் தலையீட்டிற்கு ரஷியா, அமெரிக்கா, பிரான்ஸ், சிரியா போன்ற பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், 15 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த மோதலில் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகள் இரு தரப்பு படையினராலும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. மேலும், மோதலில் பொதுமக்கள், 
அசர்பைஜான் படையினர், அர்மீனிய படையினர், அர்மீனிய ஆதரவு நகோர்னோ-கராபாத் கிளர்சி படையினர் என அனைத்து தரபினரும் உயிரிழப்பை சந்தித்து வருகின்றனர். 

போரை முடிவுக்கு கொண்டுவர இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தை மீறி இருநாடுகளும் ஒருவரை ஒருவர் தாக்கி வருவதால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அர்மீனியா-அசர்பைஜான் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் அர்மீனிய ஆதரவு கிளர்ச்சி படையினர் ஆகும். சண்டை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவர ரஷியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. 
Tags:    

Similar News