கொரோனா தொற்று காரணமாக கொழும்புவின் புறநகர் பகுதிகளான திவுலப்பிட்டிய மற்றும் மினுவங்கொட ஆகிய இடங்களில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தீவு நாடான இலங்கையில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, கடந்த ஜூன் 28 ஆம் தேதி கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டன. பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புவின் புறநகர் பகுதிகளான திவுலப்பிட்டிய மற்றும் மினுவங்கொட ஆகிய இடங்களில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திவுலப்பிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இரு நகரங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணை சந்தித்தவர்கள் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மக்கள், தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கேற்ப செயல்பட வேண்டும் எனவும் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.