செய்திகள்
விளாடிமிர் புதின்

அசர்பைஜானுடன் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் புதினுடன் அர்மீனிய பிரதமர் பேச்சுவார்த்தை - களமிறங்குகிறதா ரஷியா?

Published On 2020-09-27 17:31 GMT   |   Update On 2020-09-27 17:31 GMT
அர்மீனியா - அசர்பைஜான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை அர்மீனிய பிரதமர் நிகோல் பஷ்னியன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தினார்.
யெரிவன்:

அர்மீனியா மற்றும் அசர்பைஜான் ஆகிய இரு நாடுகளும் ஒருங்கிணைந்த சோவித் யூனியனின் பகுதிகளாகவே இருந்தது. ஆனால் 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்த பின்னர் அர்மீனியா மற்றும் அசர்பைஜான் ஆகியவை தனித்தனி நாடுகளாக அறிவிக்கப்பட்டது. அர்மீனியாவில் கிருஸ்தவ மதத்தினரும், அசர்பைஜானில் இஸ்லாமிய மதத்தினரும் பெரும்பான்மையாக உள்ளனர். 

இரு நாடுகளையும் எல்லையாக பிரிக்கும் பகுதியில் நகோர்னோ-கராபத் என்ற தன்னாட்சி அதிகாரம் பெற்ற மாகாணம் அமைந்திருந்தது. மலைப்பகுதியில் அமைந்துள்ள அந்த மாகாணம் அசர்பைஜானின் அங்கம் என சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், இந்த மாகாணத்தில் பெரும்பாலானோர் அர்மீனிய ஆதரவாளர்களே வாழ்ந்து வந்தனர். அவர்கள் அசர்பைஜானில் இருந்து பிரிந்து சென்று அர்மீனியாவில் தான் சேரவேண்டும் என முடிவு செய்தனர். 

இதனால், சிறு குழுக்களாக இணைந்து அசர்பைஜானுக்கு எதிராக சண்டையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் சோவியத் யூனியன் முடிவுக்கு வந்ததையடுத்து நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையமாக கொண்டு அர்மீனியா மற்றும் அசர்பைஜான் இடையே போர் வெடித்தது.

இந்த போரில் நகோர்னோ-கராபத் மாகாணத்தின் பெரும்பகுதியை அர்மீனியா கைப்பற்றி தனது ராணுவத்தை நிலைநிறுத்தியது. மேலும், அந்த மாகாணத்தில் தன்னாட்சி அதிகாரமும் வழங்கப்பட்டது. அன்றில் இருந்து பல ஆண்டுகளாக அர்மீனியா - அசர்பைஜான் இடையே அவ்வப்போது மோதல்கள் அரங்கேறி வருகிறது. 

இந்த மோதலின் போது அர்மீனியாவுக்கு ஆதரவாக ரஷியாவின் செயல்பாடுகள் உள்ளது. அதேபோல், அசர்பைஜானுக்கு ஆதரவாக துருக்கியின் செயல்பாடுகள் உள்ளது.

இதற்கிடையில், கடந்த சில மாதங்களாக அர்மீனியா-அசர்பைஜான் நாடுகளுக்கும் இடையே சிறு சிறு மோதல்கள் நிலவி வந்தன. 

இதற்கிடையில், அர்மீனியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நகோர்னோ-கராபத் மாகாணத்தின் தலைநகரான ஸ்டெபனாஹெட் பகுதியில் இன்று அசர்பைஜான் ராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பெண் உள்பட பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அசர்பைஜான் ராணுவத்தின் 2  ஹெலிகாப்டர்கள், 3 உளவு விமானங்களை சுட்டுவீழ்த்தியதாக அர்மீனிய ராணுவம் தெரிவித்தது.

ஆனால், அசர்பைஜான் தரப்பிலோ தாக்குதலை முதலில் தொடங்கியது அர்மீனியாதான் என குற்றச்சாட்டியுள்ளது. மேலும், அர்மீனியாவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டின் 12 வான் பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் அசர்பைஜான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சர்ச்சைக்குரிய நகோர்னோ-கராபத் பகுதியில் இரு நாடுகளின் ராணுவ டாங்கிகளும் நேருக்கு நேர் மோதின. இதில் சில ராணுவ டாங்கிகள் வீழ்த்திப்பட்டு தீக்கிரையானது.

இந்த மோதலையடுத்து, ராணுவம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அர்மீனிய பிரதமர் நிகோல் அதிரடியாக அறிவித்தார். அசர்பைஜானும் போருக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த மோதலின் ஒரு பகுதியாக அசர்பைஜான் மீது தாக்குதல் நடத்த முற்பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அர்மீனியாவுக்கு துருக்கி பகீரங்க எச்சரிக்கை விடுத்தது.

இதனால், அர்மீனியா-அசர்பைஜான் மோதல் சர்வதேச முக்கியத்துவம் பெரும் நிகழ்வாக மாறியுள்ளது. இந்த நாடுகள் வழியாக உலகின் பல்வேறு பகுதிகளுக்கு கச்சா எண்ணெய் குழாய் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நகோர்னோ-கராபத் பகுதியில் நடைபெற்ற மோதல் மற்றும் போர் பதற்றத்தை தொடர்ந்து அர்மீனிய பிரதமர் நிகோல் பஷ்னியன் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின்போது பதற்றத்தை அதிகரிக்கும் வகையிலான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என அர்மீனிய பிரதமரிடம் ரஷிய அதிபர் புதின் வலியுறுத்தியதாக ரஷிய அதிபர் மாளிகையான கிரிம்லின் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் அர்மீனியாவின் பக்கமே ரஷியா இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

அர்மீனியாவுக்கு ரஷியா ஆதரவு அளிக்கும் வகையில் அசர்பைஜானுக்கு ஆதரவாக உள்ள துருக்கிக்கு இது பெருத்த அடியாகவே இருக்கும். ஒரு வேளை அர்மீனியாவுக்கும், அசர்பைஜானுக்கு இடையே போர் மூளூம் பட்சத்தில் ரஷிய படைகள் அர்மீனியாக்கு ஆதரவாக களமிறங்களாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News