செய்திகள்
நேபாளம் - கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி
நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலியாகி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
காத்மாண்டு:
நேபாள நாட்டில் பருவமழை காலத்தில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து சில நாட்களாக பெய்த கனமழையால் சாலையெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஒருபுறம் கொரோனா பாதிப்புகளுக்காக மக்கள் வெளியே வருவது கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், கனமழை மற்றும் வெள்ளத்தினால் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரில் நீந்திச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
சாலைகள் முழுவதும் வெள்ளநீர் தேங்கி வாகன போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. மற்றொரு புறம் கனமழையால் நிலச்சரிவு சம்பவங்களும் ஏற்பட்டன.
இந்நிலையில், நேபாளத்தின் சியாஞ்சியா மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.