செய்திகள்
டிரம்ப்

கொரோனா பரவலுக்கு சீனாவை பொறுப்பேற்க செய்ய வேண்டும் - ஐ.நா.வில் டிரம்ப் உரை

Published On 2020-09-23 21:54 GMT   |   Update On 2020-09-23 21:54 GMT
கொரோனா பரவலுக்கு சீனாவை பொறுப்பேற்க செய்ய வேண்டும் என ஐ.நா.வில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேசினார்.
நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா. சபையின், 75-வது ஆண்டு பொது கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக, உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஐ.நா. பொதுக்கூட்டத்தில் நேரடியாக பங்கேற்று உரையாற்ற முடியாததால் அவர்களின் பதிவு செய்யப்பட்ட உரை ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் உரை நேற்று முன்தினம் ஐ.நா. பொதுக்கூட்டத்தில் ஒளிபரப்பப்பட்டது. அந்த உரையில் டிரம்ப் பேசியதாவது:-

‘சீனா வைரஸ்’ என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் நாம் தீவிர போரில் ஈடுபட்டுள்ளோம். கொரோனா, 188 நாடுகளில், லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ளது. சீனா தான், இந்த கொடிய வைரசை உலகிற்கு பரப்பியது. கொரோனா பரவலின் துவக்கத்தில், உள்நாட்டு விமான போக்குவரத்தை நிறுத்திய சீனா, வெளிநாட்டு விமான சேவையை மட்டும் அனுமதித்தது. இதன் மூலமாகவே கொரோனா வெளிநாடுகளுக்கு பரவியது.

சீனாவின் மறைமுக கட்டுப்பாட்டில், உலக சுகாதார அமைப்பு உள்ளது. இந்த அமைப்பும், சீன அரசும் இணைந்து, ‘மனிதருக்கு மனிதர், கொரோனா வைரஸ் பரவாது’ என, பொய் அறிக்கை வெளியிட்டன. பின், அறிகுறி இல்லாத மனிதரிடம் இருந்து வைரஸ் பரவாது என, மேலும் பொய் பேசின. இதனால் உலக நாடுகள் சந்தித்த பாதிப்பிற்கான பொறுப்பை, சீனா மற்றும் உலக சுகாதார அமைப்பு ஏற்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை, ஐ.நா., எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிலையில் ஜனாதிபதி டிரம்பின் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ள சீனா இது தொடர்பாக அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

துரதிருஷ்டவசமாக வதந்திகள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இட்டுக்கட்டியதற்காகவும், அனைத்து ஆதாரங்களுக்கு எதிராகவும், நிழல் அரசியல் நோக்கங்களுக்காகவும் சீனாவை இழிவுபடுத்திய அமெரிக்காவுக்கு சீன தரப்பு தனது உறுதியான எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News