செய்திகள்
ரூத் பேடர் கின்ஸ்பர்க்

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு பெண் நீதிபதி காலமானார் - ஜனாதிபதி டிரம்ப் இரங்கல்

Published On 2020-09-19 20:15 GMT   |   Update On 2020-09-19 20:15 GMT
அமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்து வந்த ரூத் பேடர் கின்ஸ்பர்க் புற்றுநோய் காரணமாக காலமானார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்து வந்தவர் ரூத் பேடர் கின்ஸ்பர்க். இவர் புற்றுநோயால் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 87.

பெண் உரிமை ஆர்வலரான ரூத் பேடர் கின்ஸ்பர்க் நாட்டின் மிகவும் வயதான நீதிபதி மற்றும் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் 2-வது பெண் நீதிபதி என்கிற பெருமைகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.

1993-ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி பில் கிளிண்டனால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்ட ரூத் பேடர் கின்ஸ்பர்க் தாராளவாதத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார். அதுமட்டுமின்றி மரண தண்டனைகள் குறைக்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இவரது பதவிக்காலத்தில் ஊனமுற்றோர் மற்றும் 18 வயதுக்கு குறைவான கொலையாளிகளுக்கு மாகாண கோர்ட்டுகள் மரண தண்டனை விதிப்பது அரசியலமைப்புக்கு விரோதமானது என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி டிரம்ப், ரூத் பேடர் கின்ஸ்பர்க் நாட்டின் சிறந்த பெண்மணி என புகழாரம் சூட்டினார்.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் தேசம் வரலாற்று சிகரத்தை இழந்துவிட்டது. நாங்கள் ஒரு நேசத்துக்குரிய சக ஊழியரை இழந்துவிட்டோம். ஆனால் வருங்கால சந்ததியினர் ரூத் பேடர் கின்ஸ்பர்க்கை நாங்கள் அறிந்ததைப் போலவே நினைவில் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என கூறினார்.
Tags:    

Similar News