செய்திகள்
உலக அளவில் கொரோனா பாதிப்பு 3 கோடியை தாண்டியது -2.23 கோடி பேர் குணமடைந்துள்ளனர்
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியை தாண்டி உள்ள நிலையில், 9.5 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
ஜெனீவா:
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று முதன் முதலாக வெளிப்பட்டு ஏறக்குறைய 9 மாதங்கள் ஆகியுள்ள போதிலும் தொற்று பரவல் இன்னும் சில நாடுகளில் உச்சத்தில் உள்ளன. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளும் மருத்துவ பரிசோதனைகள் கட்டத்திலே இருப்பதால், தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. தடுப்பூசி எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.06 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2.23 கோடியாக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9.55 லட்சமாக உள்ளது. சிகிச்சை பெற்று வரும் 74 லட்சம் பேரில், 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 51,070 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,925,666 ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,497,434 ஆக உயர்ந்துள்ளது.