செய்திகள்
டிரம்ப், ஒசாமா பின்லேடனின் மருமகள்

ஒசாமா பின்லேடனின் மருமகள் டிரம்புக்கு ஆதரவு

Published On 2020-09-06 19:59 GMT   |   Update On 2020-09-06 19:59 GMT
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் போட்டியிடுவதாக அறிவித்த நாளிலிருந்து நான் அவருக்கு ஆதரவாளராக இருந்தேன் என ஒசாமா பின்லேடனின் மருமகள் தெரிவித்துள்ளார்.
பெர்ன்:

அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி, அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை கடத்தி நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடம் மற்றும் ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மோதி வெடிக்கச் செய்தனர்.



உலகையே உலுக்கிய இந்த தாக்குதலில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடனை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானில் அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றனர்.

இந்தநிலையில் டிரம்பால் மட்டுமே இரட்டை கோபுர தாக்குதல் போன்ற மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடக்காமல் தடுக்க முடியும் என்று ஒசாமா பின்லேடனின் மருமகள் நூர் பின் லேடின் தெரிவித்துள்ளார். ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் ‘செப்டம்பர் 11’ தாக்குதலை போன்று மற்றொரு பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா எதிர்கொள்ளக்கூடும்.

ஒபாமா, பைடன் ஆட்சி நிர்வாகத்தில ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் பெருகியது, அவர்கள் ஐரோப்பாவிற்கு வர வழிவகுத்தது. பயங்கரவாதிகளை வேரோடு ஒழிப்பதில் டிரம்ப் முன்மாதிரியாக திகழ்கிறார். வெளிநாட்டு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவையும் எங்களையும் டிரம்ப் திறம்பட காப்பாற்றி வருகிறார்.

2015-ல் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் போட்டியிடுவதாக அறிவித்த நாளிலிருந்து நான் டிரம்ப்பின் ஆதரவாளராக இருந்தேன். நான் அந்த மனிதரை தூரத்திலிருந்தே பார்த்தேன். அவரின் உறுதியான தீர்மானங்களை பாராட்டுகிறேன். அவர் மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும். இது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளின் எதிர்காலத்துக்கும் இன்றியமையாதது.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்துவரும் நூர் பின் லேடின், இதயத்தில் தான் ஒரு அமெரிக்கராக நினைத்து வாழ்வதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News