செய்திகள்
டேனியல் புருட்

அமெரிக்காவில் போலீஸ் பிடியில் மேலும் ஒரு கருப்பர் பலி

Published On 2020-09-03 21:50 GMT   |   Update On 2020-09-03 21:50 GMT
அமெரிக்காவில் போலீஸ் பிடியில் மேலும் ஒரு கருப்பர் பலியான சம்பவம் கருப்பு இனத்தவர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நியூயார்க்:

அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியான பின்னர் கருப்பர் இனத்தவர் போலீஸ் பிடியில் கொல்லப்படுவது தொடர்கதை ஆகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்ற கருப்பு இனத்தவர், மினியாபொலிஸ் நகரில் கடந்த மே மாதம் போலீஸ் பிடியில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் டேனியல் புருட் (41) என்பவர் மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டபோது, அவரது சகோதரர் ஜோ, கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி நியூயார்க் நகரின் ரோசெஸ்டரில் போலீஸ் உதவியை நாடினார். தெருவில் ஆடையின்றி ஓடிய டேனியல் புருடை போலீசார் தடுத்து நிறுத்தி தாக்கி உள்ளனர். அதில் அவர் உயிரிழந்து விட்டார். இது தொடர்பான போலீஸ் வீடியோ வெளியாக தாமதம் ஆனதால், இப்போது டேனியல் புருடின் சகோதரர் ஜோ பொதுவெளிக்கு கொண்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், “எனது சகோதரருக்கு உதவி பெறத்தான் நான் போலீசுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தேன். என் சகோதரர் கொலை செய்யப்படுவதற்காக அல்ல” என கூறினார்.

இந்த சம்பவம் குறித்து நியூயார்க் மாகாண அட்டார்னி ஜெனரல் கருத்து தெரிவிக்கையில், “இது ஒரு சோகமான நிகழ்வு. இதுபற்றி விசாரணை நடத்தப்படுகிறது” என குறிப்பிட்டார்.

இது கருப்பு இனத்தவர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News