செய்திகள்
போக்குவரத்துக்கான பாதை

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரக விமான போக்குவரத்து தங்கள் நாட்டு வான்பரப்பு வழியாக நடைபெற சவுதி அனுமதி - வரலாற்று நிகழ்வு

Published On 2020-09-03 00:47 GMT   |   Update On 2020-09-03 00:47 GMT
இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான விமான போக்குவரத்திற்கு தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்திக்கொள்ள சவுதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது.
ரியாத்:

இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலை தனிக்கும் விதமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

அதன் பயனாக எகிப்து, ஜோர்டானும் ஆகிய நாடுகள் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்து அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன.

இதற்கிடையில், வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகமும் இஸ்ரேலை ஒரு தனிநாடாக ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது. இஸ்ரேலை தனிநாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காதால் இஸ்ரேல் பாஸ்போர்டை வைத்திருப்பவர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய ஐக்கிய அரபு அமீரகம் தடைவிதித்திருந்தது. 

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே நேரடி விமானப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், ராஜாங்கம், தூதரகம் உள்பட எந்த வித உறவுகளும் இல்லாமல் இருந்தது. 

ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் முயற்சியால் இஸ்ரேல்-அரபு அமீரகம் இடையே கடந்த மாதம் 14 ஆம் தேதி அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட நாடு என்ற பட்டியலில் அமீரகம் இணைந்துள்ளது. வளைகுடா நாடுகளில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் நாடு அமீரகம் தான்.

இந்த ஒப்பந்தம் மூலம் பல ஆண்டுகளாக நீடித்து வந்த பகைமை சற்று தணிந்துள்ளது. மேலும்,ராஜாங்க, தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இஸ்ரேலை புறக்கணிக்கும் வகையில் இயற்றப்பட்டிருந்த சட்டத்தை அரபு அமீரகம் ரத்து செய்தது. இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தலாம்.

இதற்கிடையில், இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரக உறவு தொடர்பான வரலாற்றில் முதல் முறையாக இரு நாடுகளுக்கு இடையேயும் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது.



முதல்கட்டமாக இஸ்ரேலில் இருந்து பிரதமர் பெஞ்சமின் அரசின் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் எல் அல் விமானத்தில் இஸ்ரேல் நாட்டில் இருந்து அமீரகத்திற்கு கடந்த 31 ஆம் தேதி பயணம் மேற்கொண்டனர்.

இந்த விமானம் சவுதி அரேபியாவில் வான்பரப்பு வழியாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றது. 

இந்த நிகழ்வு மூலம் சவுதி அரேபியா வான்பரப்பு இஸ்ரேல் விமானம் பறந்து புதிய வரலாறு எழுதப்பட்டது. ஏனென்றால் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த எந்த ஒரு விமானமும் சவுதி வான் எல்லையை பயன்படுத்த பல ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படாமல் இருந்து வந்தது.

சவுதி தனது வான் எல்லை வழியாக இஸ்ரேல் விமானம் பறக்க அனுமதி வழங்கியது அதுவே முதல் முறையாகும். இந்த பயணத்தையடுத்து இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே பயணிகள், உள்பட வகையினான விமான போக்குவரத்தும் விரைவில் நடைபெற உள்ளது.
 
இந்நிலையில், இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான விமானப்போக்குவரத்துக்கு தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்திக்கொள்ள சவுதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது.

இதன் மூலம் இஸ்ரேல் விமானங்கள் இனி சவுதி வான்பரப்பை பயன்படுத்தி நேரடியாக ஐக்கிய அமீரகத்திற்கு செல்லலாம். அதேபோல் அமீரக விமானங்கள் சவுதி வான்பரப்பை பயன்படுத்தி இஸ்ரேல் செல்லலாம். இதன்மூலம் பயண நேரம் பல மணி நேரம் குறையும். 

இந்த நிகழ்வு சவுதி மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலை தணித்து அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்தும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  

Tags:    

Similar News