செய்திகள்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்ய தயாராகுங்கள் - தேதியுடன் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப் நிர்வாகம் - அதிர்ந்து போன உலக நாடுகள்....

Published On 2020-09-02 23:03 GMT   |   Update On 2020-09-02 23:03 GMT
கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்ய இந்த தேதிக்குள் தயாராக இருக்க வேண்டும் என அமெரிக்க மாகாணங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
வாஷிங்டன்:

கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன.

பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. 

குறிப்பாக அமெரிக்கா கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக தடுப்பூசியை கண்டுபிடித்து மக்களுக்கு வழங்க டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தேர்தலை கருத்தில் கொண்டு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தும் முயற்சியில் அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்கா அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்கள், நகரங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. 

அதில் கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்ய அக்டோபர் மாத இறுதி அல்லது நவம்பர் 1-ம் தேதிக்குள் மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளும் முழுமையாக தயாராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை தடுக்கும் பணியில் ஈடுபட்டுவரும் முன்கள பணியாளர்களும், வைரஸ் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ள பிரிவினர்களான மருத்துவம், காவல்த்துறை, தேசிய பாதுகாப்பு ஊழியர்கள்,
65 வயதுக்கு அதிகானவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கும் இந்த தடுப்பூசியில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் ராபர்ட் ரெட்பீல்ட் மாகாண கவர்னர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கான இடங்கள் நவம்பர் 1-ம் தேதிக்குள் தயாராக இருக்க வேண்டும் என மாகாண கவர்னர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மொத்தம் 2 தடுப்பூசிகள் தொடர்பான தகவல்கள் அந்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன. ’தடுப்பூசி ஏ’ மற்றும் ’தடுப்பூசி பி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசிகளை சேமித்து வைப்பது, நிர்வாகம் செய்வது, ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது உள்ளிட்டவை தொடர்பான தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க மாகாணங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு தடுப்பூசிகளும் அமெரிக்காவின் பிஷிர் மற்றும் மார்டர்னா ஆகிய நிறுவனங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.   

அமெரிக்காவில் அஸ்ட்ரா செனேக்கா நிறுவனத்தின் தடுப்பூசி உள்பட 3 தடுப்பூசிகள் இறுதி கட்ட பரிசோதனையில் நிலையில் உள்ளது. 

ஆனால் தற்போது நவம்பர் 1-ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என மாகணங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ள சம்பவம் அமெரிக்கா மற்றுமல்லாமல் உலக நாடுகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News