செய்திகள்
போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் காட்சி

ஆப்ரிக்காவில் போலியோ வைரஸ் முடிவுக்கு வந்து விட்டது - உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published On 2020-08-26 00:06 GMT   |   Update On 2020-08-26 00:06 GMT
ஆப்ரிக்காவில் போலியோ வைரஸ் நோய் முற்றிலும் முடிவுக்கு வந்து விட்டதாகவும், அங்கு போலியோ வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகவும் உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
ஜெனீவா:

போலியோ என்னும் இளம் பிள்ளைவாத நோய் 1952 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் இந்த போலியோ வைரஸ் நோயால் இளம் வயதிலேயே முடக்குவாதம் 
ஏற்படுகிறது. இந்த நோய் பாதிக்கப்படும் குழந்தைகள் வளர்ச்சி குறைவாகவும், பிற்காலங்களில் ஊனமுற்ற நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். 

இந்த நோய்க்கு தடுப்பூசி 1955 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி போலியோ சொட்டு மருந்தாக உலகின் பல நாடுகள் வழங்கி வருகின்றன. இந்த சொட்டு மருந்தால் போலியோ நோய் உலகின் பல நாடுகளில் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. 

ஆனால், உலகிலேயே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆப்ரிக்காவின் சில நாடுகளில் மட்டும் போலியோ ஒழிக்கப்படாமல் இருந்தது. இங்கு போலியோ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது.

ஆப்ரிக்க நாடுகளில் நைஜீரியாவில் மட்டும் போலியோ நோய் கண்டறியப்பட்டு வந்தது. அங்கு மருத்துவத்துறையினருடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு மற்றும் உள்நாட்டு அரசு, தன்னார்வளர்கள் என பலத்தரப்பட்ட துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் தற்போது போலியோ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆப்ரிக்காவில் போலியோ கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகவும், போலியோ இல்லாத பகுதியாக ஆப்ரிக்கா மாறிவிட்டதாகவும் உலக சுகாதார அமைப்பு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாக அங்கு யாருக்கும் போலியோ பரவவில்லை என்பதால் ஆப்ரிக்காவில் போலியோ முடிவுக்கு வந்துவிட்டது என்ற இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகிலேயே தற்போது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் மட்டும்தான் போலியோ நோய் பரவல் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News