செய்திகள்
மகிந்தா ராஜபக்சே

இலங்கையில் புதிய மந்திரிசபை பதவி ஏற்பு - ராஜபக்சே குடும்பத்தில் 4 பேர் மந்திரி ஆனார்கள் - 4 தமிழர்களுக்கு மந்திரி பதவி

Published On 2020-08-12 21:31 GMT   |   Update On 2020-08-12 21:31 GMT
இலங்கையில் புதிய மந்திரிசபை நேற்று பதவி ஏற்றது. ராஜபக்சே குடும்பத்தில் 4 பேர் மந்திரியாகி இருக்கிறார்கள். 4 தமிழர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டு இருக்கிறது.
கொழும்பு:

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அண்ணனும், முன்னாள் அதிபருமான மகிந்தா ராஜபக்சே பிரதமராக இருந்து வந்தார்.

225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் ராஜபக்சே சகோதரர்களின் இலங்கை மக்கள் கட்சி 145 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளுக்கு 5 இடங்கள் கிடைத்தன. இதைத்தொடர்ந்து, மகிந்தா ராஜபக்சே கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த நாட்டின் பிரதமராக மீண்டும் பதவி ஏற்றார்.

அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று 28 கேபினட் மற்றும் 40 ராஜாங்க மந்திரிகளை நியமித்தார்.

புதிய மந்திரிசபையின் பதவி ஏற்பு விழா கண்டி நகரில் நேற்று நடைபெற்றது. புதிய மந்திரிகளுக்கு அதிபர் ராஜபக்சே பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மந்திரிசபையில் இடம்பெற்று உள்ளனர். ராஜபக்சே நிதி, மத விவகாரம், கலாசார அலுவல்கள், நகர அபிவிருத்தி ஆகிய இலாகாக்களின் பொறுப்பை தன்வசம் வைத்துக்கொண்டு உள்ளார்.

கோத்தபய ராஜபக்சேயின் மூத்த அண்ணன் சாமல் ராஜபக்சே நீர்ப்பாசனம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு மந்திரியாக பதவி ஏற்று உள்ளார். அவரது மகன் ஷாசீந்திர ராஜபக்சேவுக்கு உயர் தொழில் நுட்பதுறை மந்திரி பதவி வழங்கப்பட்டு உள்ளது.

மகிந்தா ராஜபக்சேவின் மூத்த மகன் நமல் ராஜபக்சே இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை மந்திரியாக பதவி ஏற்று இருக்கிறார். முதன் முதலாக 2010-ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் இப்போது முதன் முதலாக மந்திரியாகி இருக்கிறார்.

ஜி.எல்.பெரீஸ் கல்வி மந்திரியாகவும், தினேஷ் குணவர்த்தனே வெளிநாட்டு மந்திரியாகவும் பதவி ஏற்று இருக்கிறார்கள்.

ராணுவ இலாகா தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சேயிடம் இருக்கும்.

மந்திரிசபையில் டக்ளஸ் தேவானந்தா, அலி சப்ரி, சதாசிவம் வியாழேந்திரன், ஜீவன் தொண்டமான் ஆகிய 4 தமிழர்கள் இடம்பெற்று உள்ளனர். இவர்களில் கேபினட் மந்திரிகளான டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடல் தொழில் துறையும், அலி சப்ரிக்கு நீதியியல் துறையும் வழங்கப்பட்டு உள்ளது.

ராஜாங்க மந்திரிகளான சதாசிவம் வியாழேந்திரனுக்கு தபால் சேவை, வெகுஜன ஊடகங்கள் அபிவிருத்தி இலாகாவும், ஜீவன் தொண்டமானுக்கு தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உள்கட்டமைப்பு இலாகாவும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News