செய்திகள்
தென்கொரியாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி
தென்கொரியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர்.
சியோல்:
தென்கொரியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அந்நாட்டின் சியோல், ஹெடோங் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், சில பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இம்மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை 667 நிலச்சரிவுகள் கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், கனமழை, வெள்ளம் காரணமாக 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தென்கொரியாவில் பெய்துவரும் கனமழை காரணாமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 12 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கனமழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.