செய்திகள்
ரஷியா, சீனா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியா, சீனா தலையீடு இருக்கும் - உளவுத்துறை எச்சரிக்கை

Published On 2020-08-09 03:53 GMT   |   Update On 2020-08-09 03:53 GMT
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் தலையீடு இருக்கும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷியா தலையிட்டு குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்புக்கு ஆதரவாகவும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராகவும் செயல்பட்டதாக கடும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ராபர்ட் முல்லர் தலைமையில், அமெரிக்காவில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க தேர்தலில் ரஷியா தலையிட்டதற்கு ஆதாரங்கள் இல்லை என ராபர்ட் முல்லர் தலைமையிலான விசாரணைக்குழு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

அதே சமயம் ராபர்ட் முல்லரின் விசாரணையை டிரம்ப் தடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்பின் பதவிக்காலம் முடிவதால், அங்கு வரும் நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது.

இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களமிறங்கி இருக்கிறார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அமெரிக்காவில் நடக்க இருக்கும் இந்த தேர்தல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ரஷியா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் தலையீடு இருக்கும் என அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க உளவுத் துறையின் தலைவர் வில்லியம் ஆர் இவானினா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த தேர்தலை போல இந்த தேர்தலிலும் ரஷியா டிரம்புக்கு ஆதரவாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் தேர்தலுக்கு முன்னதாக ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடனை இழிவுபடுத்த ரஷியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக

வில்லியம் ஆர் இவானினா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேர்தலில் ரஷியா மட்டுமின்றி சீனா, ஈரான் ஆகிய நாடுகளின் தலையீடு இருக்கும் என்றும், அந்த 2 நாடுகளும் டிரம்ப் 2-வது முறையாக வெற்றி பெறுவதை விரும்பவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி இந்த தேர்தலில் அமெரிக்க மக்கள் மத்தியில் ஜோ பிடனின் செல்வாக்கை அதிகப்படுத்த சீனா முயற்சிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் ரஷியா தனக்கு உதவலாம் என்கிற உளவுத்துறையின் மதிப்பீட்டை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “நான் மீண்டும் ஜனாதிபதி ஆவதை ரஷியா விரும்பாது என்று நினைக்கிறேன். ஏனென்றால் என்னை விட யாரும் ரஷியாவிடம் கடுமையாக நடந்து கொள்ளவில்லை” எனக் கூறினார்.

அதே சமயம் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது சீனா விரும்பவில்லை என்கிற விஷயத்தில் உளவுத்துறையுடன் டிரம்ப் உடன்படுகிறார். இதுபற்றி அவர் கூறுகையில் “ஜோ பிடன் ஜனாதிபதியாக இருந்தால் நமது நாட்டை சீனா சொந்தமாகும்” என தெரிவித்தார்.

இதனிடையே உளவுத்துறையின் இந்த அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் “எங்கள் தேர்தல் செயல்முறைகளில் வெளிநாட்டு தலையீட்டை அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது. மேலும் நமது ஜனநாயக நிறுவனங்களை குறிவைக்கும் தீங்கிழைக்கும் அச்சுறுத்தல்களுக்கு தக்க பதில் அளிக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News