செய்திகள்
கேரள விமான விபத்து சம்பவத்தால் நாங்கள் மிகவும் துயரப்படுகிறோம் - அமெரிக்கா
கேரளாவில் நடைபெற்ற விமான விபத்து சம்பவத்தால் மிகவும் துயரப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:
துபாயில் இருந்து நேற்று 190 பயணிகளுடன் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்தனர். மேலும், 173 பேர் படுகாயமடைந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெறுபவர்களில் 15 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில், கேரள விமான விபத்து குறித்து அமெரிக்கா இரங்கல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,’கேரள விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக எங்கள் இதயம் வெளியே செல்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்காவும், நண்பர்களுக்காகவும் நாங்கள் மிகவும் துயரப்படுகிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.