செய்திகள்
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் - இன்று வாக்கு எண்ணிக்கை
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.
கொழும்பு:
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் கடந்த 2015-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்பே நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். அதாவது, அதிபர் கோத்தபய ராஜபக்சேவால் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
இதற்கிடையே, இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால், 5 மாதங்களுக்கு பின்னர் பொதுத் தேர்தல் நேற்று நடைபெற்றது.
இம்முறை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுனா, ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறிய சஜித் பிரேமதசாவின் ஐக்கிய மக்கள் சக்தி என மும்முனை போட்டி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கியது. மக்கள் விறுவிறுப்பாக தங்கள் வாக்கினைப் பதிவுசெய்தனர். மாலை 5 மணியுடன் நிறைவடைந்த நிலையில் 70 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், இன்று காலை முதல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியது. நள்ளிரவுக்குள் முடிவு தெரிய வரும் என கூறப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு இலங்கையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.