செய்திகள்
கொரோனா பாதிப்பில் இருந்து 1 கோடியே 21 லட்சம் பேர் மீட்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 21 லட்சமாக அதிகரித்துள்ளது.
ஜெனீவா:
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 21 லட்சத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 89 லட்சத்து 56 ஆயிரத்து 830 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 61 லட்சத்து 4 ஆயிரத்து 823 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 514 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 7 லட்சத்து 10 ஆயிரத்து 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1 கோடியே 21 லட்சத்து 41 ஆயிரத்து 958 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-
அமெரிக்கா - 25,29,952
பிரேசில் - 20,20,637
இந்தியா -12,82,215
ரஷியா - 6,69,026
தென் ஆப்ரிக்கா - 3,77,266
சிலி - 3,38,291
பெரு - 3,02,457
மெக்சிகோ - 3,00,254