செய்திகள்
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ

ஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்புக்கு அமெரிக்கா கண்டனம்

Published On 2020-08-03 05:58 GMT   |   Update On 2020-08-03 05:58 GMT
ஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்புக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:

சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் செப்டம்பர் மாதம் 6ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்க இருந்தது. சர்ச்சைக்குரிய ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்திய பிறகு வரும் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

இந்த தேர்தலில் ஜனநாயக சார்பு கட்சிகளின் கை ஓங்கும் என்றும் சீன ஆதரவு கட்சிகள் பின்னடைவை சந்திக்கும் என்றும் எதிர்பார்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் நடக்க இருந்த இந்த தேர்தலை ஒரு ஆண்டுக்கு அதாவது அடுத்த ஆண்டு செப்டம்பர் 5ந் தேதிக்கு ஒத்திவைத்து ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் இந்த வார தொடக்கத்தில் உத்தரவு பிறப்பித்தார். இது ஜனநாயகத்தை அழிக்கும் முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த நிலையில் ஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்புக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

செப்டம்பர் 6ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த சட்டசபை தேர்தலை ஒத்திவைப்பதற்கான ஹாங்காங் அரசின் முடிவை அமெரிக்கா கண்டிக்கிறது. இவ்வளவு நீண்ட தாமதத்துக்கு சரியான காரணம் இல்லை. இதனால் ஹாங்காங்கில் இனி ஜனநாயக ரீதியில் தேர்தல் நடைபெறுமா ? மக்கள் வாக்களிக்க முடியுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

எனவே ஹாங்காங் அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏற்கனவே திட்டமிட்டபடியோ அல்லது செப்டம்பர் 6ந் தேதிக்கு அருகிலேயோ தேர்தலை நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News