செய்திகள்
கலிபோர்னியா காட்டுத்தீ

கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ- 20 ஆயிரம் ஏக்கர் எரிந்து நாசம்

Published On 2020-08-03 05:51 GMT   |   Update On 2020-08-03 05:51 GMT
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 20 ஆயிரம் ஏக்கருக்கு பரவியுள்ள காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரிவர்சைட் கவுண்டி என்ற வனப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. ஒரு சில மணி நேரங்களில் மளமளவென பரவிய தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

முதலில் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் தீ  பரவியதாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள், 1,300 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களை கொண்டு காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். ஆனாலும், தொடர்ந்து தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கத் தொடங்கியது.

இந்த காட்டுத்தீக்கு  ஆப்பிள் பயர்  என பெயரிட்ட அதிகாரிகள், வனப்பகுதியை யொட்டி 2500க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை, அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்நிலையில், ஏராளமான தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தியும் கட்டுக்கடங்காத காட்டுத்தீ, 20 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு பரவி உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செங்குத்தான, கரடுமுரடான மலைப்பகுதிகளில் தீயணைப்பு வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் அணுக முடியாதவையாக உள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News