செய்திகள்
ஆப்கானிஸ்தான் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவர் சுட்டுக் கொலை

Published On 2020-08-03 01:59 GMT   |   Update On 2020-08-03 01:59 GMT
ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவர் அசாத்துல்லா ஓராக்சாய் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளுக்கும் மேலாக தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்த நாட்டு அரசுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளும் காலூன்றி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இவர்கள் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு போன்ற பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய வழிபாட்டுத்தலத்துக்குள் ஐ.எஸ். பயங்கரவாதிகள் புகுந்து நடத்திய கொடூர தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் நங்கார்ஹர் மாகாணத்திலுள்ள ஜலாலாபாத் நகரில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான அசாத்துல்லா ஓராக்சாய் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு விரைந்த ராணுவ வீரர்கள் அசாத்துல்லா ஓராக்சாய் பதுங்கி இருந்த வீட்டை சுற்றிவளைத்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த அசாத்துல்லா ஓராக்சாய் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் உளவு அமைப்பின் அதிகாரியாக இருந்து கொண்டு, நாட்டில் நடந்த பல கொடூர தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News