செய்திகள்
கோப்பு படம்

ஆப்கானிஸ்தான்: சிறைச்சாலைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் - 3 பேர் பலி

Published On 2020-08-02 21:59 GMT   |   Update On 2020-08-03 02:00 GMT
ஆப்கானிஸ்தானில் சிறைச்சாலைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தானின் தலிபான் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த உள்நாட்டு போரில் பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

இதற்கிடையில், பக்ரீத் பண்டிகையையொட்டி 3 நாட்கள் சண்டை நிறுத்தத்தில் அரசு படைகளும், தலிபான் பயங்கரவாதிகளும் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பு அமைதி ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக நேற்று நூற்றுக்கும் அதிகமான தலிபான் பயங்கரவாதிகளை சிறையில் இருந்து ஆப்கான் அரசு விடுதலை செய்திருந்தது.

தலிபான்களுடன் போர் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தாலும், ஐ.எஸ். பயங்கரவாத குழு தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, அந்நாட்டின் நஹாங்கர் மாகாணம் ஜலாலாபாத் நகரில் உள்ள சிறைச்சாலை வாசலுக்கு அருகே நேற்று வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை பயங்கரவாதிகள் வெடிக்கச்செய்தனர். இதனால் சிறைச்சாலையின் சுவர் இடிந்து விழுந்தது. 

இதையடுத்து, அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகள் சிறைச்சாலையில் காவலுக்கு இருந்து பாதுகாப்பு படையினர் மீதும் சிறைக்கைதிகள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20-க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர், சிறைக்கைதிகள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலையடுத்து உடனடியாக சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் மீது பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  
பயங்கரவாதிகள் சிறைச்சாலையின் ஒரு பகுதியை கைப்பற்ற முயற்சித்து வருவதால் சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Tags:    

Similar News