செய்திகள்
பாதுகாப்பு பணியில் போலீசார்

ஆப்கானிஸ்தான் - கார் வெடிகுண்டு தாக்குதலில் 40க்கும் அதிகமானோர் பலி

Published On 2020-07-30 18:02 GMT   |   Update On 2020-07-30 18:02 GMT
ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளாக அந்த நாட்டு அரசுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போர் தொடங்கியதில் இருந்தே ஆப்கானிஸ்தான் அரசு படைக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வந்தது.

இதற்கிடையே, போரை நிறுத்த தலிபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதில், கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தலிபான் பயங்கரவாத அமைப்பு மற்றும் அமெரிக்க அரசுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.  இதன்படி, இந்த மாத இறுதிக்குள் தனது படைவீரர்களின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய லோகார் மாகாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் ஒன்றில் இருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை மர்ம நபர்கள் வெடிக்க செய்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு உடனடியாக எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
Tags:    

Similar News