செய்திகள்
ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகம்

உளவு வேலையில் ஈடுபட்டதால் சீன தூதரத்தை மூட உத்தரவிட்டுள்ளோம் - அமெரிக்கா விளக்கம்

Published On 2020-07-22 22:17 GMT   |   Update On 2020-07-22 22:17 GMT
ஹூஸ்டனில் உள்ள சீன தூதரம் உளவு வேலையில் ஈடுபட்டதால் 72 மணி நேரத்தில் மூட உத்தரவிட்டுள்ளோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று பரவியதற்குப்பின் இந்த மோதல் உச்சத்தை தொட்டுள்ளது. இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன.

தென்சீன கடல் எல்லையில் சீனாவால் அச்சுறுத்தப்படும் நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. லடாக் விவகாரத்திலும் அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இதனால் அமெரிக்கா மீது சீனா கடும் கோபத்தில் உள்ளது.

இதற்கிடையில், அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தின் முன்பு வைத்து முக்கியமான ஆவணங்கள் நேற்றுமுன்தினம் இரவு தீ வைத்து எரிக்கப்பட்டன. ஆவணங்கள் எரிக்கப்படுவது போன்றும் போலீசார் மற்றும் தீயணைப்பு அதை அனைக்க முற்படுவது போன்றும் வீடியோக்கள் அமெரிக்க ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.



இந்த சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களில் (நேற்று) ஹூஸ்டன் தூதரகத்தை உடனடியாக மூட சீனாவுக்கு அமெரிக்கா உத்தரவிட்டது. 72 மணி நேரத்திற்கு தூதரகத்தை சீன அதிகாரிகள் காலி செய்ய வேண்டும் எனவும் கெடு விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த செயலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உளவு வேலையில் ஈடுபட்டதால் சீன தூதரகத்தை மூட உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மோர்கன் கூறுகையில், அமெரிக்காவின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடுகிறது. அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. வியாபார ரகசியங்கள், அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்புகள் திருட சீனா முயற்சிக்கிறது. 

இதற்கான உளவு வேலைகளில் ஹூஸ்டனில் உள்ள தூதரத்தை சீனா பயன்படுத்துகிறது. அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்கள் மற்றும்
அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவே ஹூஸ்டன் சீன தூதரம் மூட உத்தரவிட்டுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

அதேபோல் வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ கூறுகையில், ’அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அறிவுசார் தகவல்களை சீனா திருட முயற்சிக்கிறது. இதனால் பல்லாயிரக்கணக்கானவர்களின் தொழில் மற்றும் வேலை பாதிப்பு ஏற்படுக்கிறது. இது தொடர்ந்து நடைபெற அனுமதிக்கக்கூடாது என அதிபர் டிரம்ப் கூறினார். 

நீங்கள் இப்போது பார்க்கும் நிகழ்வுகள் அதிபர் டிரம்பின் நடவடிக்கைகளால் நடைபெற்றவை. இது போன்ற செயல்களில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவோம்’ என்றார்.  

Tags:    

Similar News