செய்திகள்
விபத்து நடந்த மின் உற்பத்தி நிலையம்

மின் உற்பத்தி நிலையத்தில் வெடி விபத்து - ஈரானின் நடைபெறும் அடுத்தடுத்த மர்மமான விபத்துக்கள்

Published On 2020-07-20 00:11 GMT   |   Update On 2020-07-20 00:11 GMT
ஈரான் நாட்டின் அணு ஆயுத செறிவூட்டல் மையம் உள்பட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மர்மமான முறையில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று அந்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் வெடி விபத்து ஏற்பட்டது.
தெஹ்ரான்:

ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. இதையடுத்து அணு ஆயுத தயாரிப்பு, அணு ஆயுத செறிவூட்டல் நடவடிக்கையில் ஈரான் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகிறது.

ஈரானின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இதற்கிடையில், கடந்த சில நாட்களாக அந்நாட்டின் அணு ஆயுத செறிவூட்டல் மையம், பெட்ரோ கெமிக்கல், மையம், திரவ எரிபொருள் உற்பத்தி மையம், மின் உற்பத்தி மையம், மருத்துவமனை உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான பல்வேறு பகுதிகளில் மர்மமான முறையில் வெடி விபத்துகளும், தீ விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.  

அணு ஆயுத செறிவூட்டல் மையம், மின் உற்பத்தி மையம், வேதிப்பொருள் உற்பத்தி மையத்தில் அடுத்தடுத்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகறது. இந்த விபத்துக்கான காரணங்கள் எவை என்பதை கண்டுபிடிப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

தங்கள் நாட்டின் அணு ஆயுத மையம், மின் உற்பத்தி அமைப்பு உள்ளிட்ட பாதுகாப்பு சம்பந்தமான முக்கிய இடங்களை குறிவைத்து இஸ்ரேல் சைபர் 
தாக்குதல் நடத்துவதாக ஈரான் அரசு குற்றச்சாட்டியுள்ளது. 

அணு ஆயுத உற்பத்தியை தடுக்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஈரான் குற்றச்சாட்டி வருகிறது.

இந்நிலையில், இந்த மர்ம விபத்துக்களின் வரிசையில் மேலும் ஒரு வெடி விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்நாட்டின் இஸ்பஹன் மாகாணத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று திடீரென மர்மமான முறையில் வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த வெடிவிபத்து காரணமாக மின் உற்பத்தி நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. 

மேலும், நகரின் முக்கிய இடங்களில் சில மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. ஆனால் இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரானில் கடந்த சில நாட்களாக நடைபெறும் மர்ம விபத்துக்கள் வரிசையில் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள இந்த மர்ம விபத்து குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.

ஆனால் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானில் அடுத்தடுத்து நடைபெற்ற விபத்துக்கள்:

ஜூன் 26 - ஹோகிர் நகரில் உள்ள திரவ எரிபொருள் உற்பத்தி மையத்தில் வெடி விபத்து, 
ஜூன் 26 - ஷீரஸ் நகரில் உள்ள மின் உற்பத்தி மையத்தில் தீ விபத்து
ஜூன் 30 - மருத்துவமனையில் வெடி விபத்து - 19 பேர் பலி
ஜூலை 2 - நடன்ஸ் அணு ஆயுத செறிவூட்டல் மையத்தில் வெடி விபத்து
ஜூலை 3 - ஷீரஸ் நகரில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து
ஜூலை 4 - அல்வாஸ் நகரில் உள்ள மின் உற்பத்தி மையத்தில் வெடி விபத்து
ஜூலை 4 - மஸ்ஹர் நகரில் உள்ள பெட்ரோ கெமிக்கல் மையத்தில் வாயுக்கசிவு
ஜூலை 19 - இஸ்பஹன் மாகாண மின் உற்பத்தி மையத்தில் வெடி விபத்து
Tags:    

Similar News