செய்திகள்
பிரேசிலில் இப்போது கொரோனா அதிவேகமாக பரவவில்லை - உலக சுகாதார அமைப்பு
பிரேசிலில் தற்போது கொரோனா அதிவேகமாக பரவவில்லை எனவும், வைரஸ் பரவும் வேகம் சீராக உள்ளதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
பிரேசிலா:
உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக பாதிப்பை சந்தித நாடுகள் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
பிரேசிலில் இதுவரை 20 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு அந்நாட்டில் இதுவரை 77 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், தொடக்கத்தில் பிரேசிலில் கொரோனா பரவும் வேகம் பல மடங்காக இருந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா பரவும் வேகம் ஒரே சீராக உள்ளது.
அதாவது தினமும் சராசரியாக 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதனால் வைரஸ் பரவும் வேகம் குறைந்து வருவதாகவும், பிரேசில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையை தடுக்க முயற்சிக்க வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் மைக்கில் ரேயான் கூறுகையில், ’பிரேசிலில் கொரோனா பரவும் வேகம் அதிதீவிரமாக இல்லை. வைரஸ் பரவும் வேகம் தற்போது சீராக உள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வைரஸ் உறுதி செய்யப்பட்ட நபர் மூலம் சராசரியாக 2 பேருக்கு வைரஸ் பரவி வந்தது.
ஆனால் தற்போது அந்த விகிதம் வெகுவாக குறைந்து 0.5 முதல் 1.5 என்ற அளவில் உள்ளது. இதனால் வைரஸ் பரவும் வேகம் வெகுவாக குறைந்து வருகிறது என்பது தெரியவந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி வைரசின் இரண்டாவது அலை ஏற்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை பிரேசில் அரசு துரிதப்படுத்த வேண்டும்’ என்றார்.