செய்திகள்
கோப்புப்படம்

ஆப்கானிஸ்தானில் மசூதிக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் - 4 பேர் பலி

Published On 2020-07-15 10:12 GMT   |   Update On 2020-07-15 10:12 GMT
ஆப்கானிஸ்தானில் மசூதிக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. தற்போது உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.

போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்தும் அப்பாவி மக்களை குறிவைத்தும் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வடக்கு மாகாணம் பர்யாப்பின் தலைநகர் மயாம்னாவில் உள்ள ஒரு மசூதியில் நேற்று மதியம் வழக்கம்போல் தொழுகை நடந்தது. உள்ளூரை சேர்ந்த முஸ்லிம்கள் பலர் அங்கு தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென மசூதிக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் 2 பேர் அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. மசூதிக்குள் இருந்தவர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். எனினும் இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதற்கிடையில் தாக்குதல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் பயங்கரவாதிகள் 2 பேரையும் சுட்டுக் கொன்றனர்.இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் தலீபான் பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியதாக மயாம்னா நகர போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News