செய்திகள்
கோப்பு படம்

அமெரிக்காவுக்கு ரகசிய தகவல் வழங்கியதாக சொந்த நாட்டை சேர்ந்தவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியது ஈரான்

Published On 2020-07-14 17:39 GMT   |   Update On 2020-07-14 17:39 GMT
அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ-வுக்கு ரகசிய தகவல் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட ஈரானியருக்கு அந்நாட்டு அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது.
தெஹ்ரான்:

ஈரானுக்கு அமெரிக்காவும் பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக தங்களின் அணு ஆயுத தயாரிப்பை தடுத்து நிறுத்த முயற்சி செய்வதாக அமெரிக்கா மீது ஈரான் பகிரங்க குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது.

மேலும், ஈரானின் புரட்சிப்படை தளபதியான சுலைமானி ஈராக் தலைநகர் பாக்த்தாத்தில் அமெரிக்க படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் கொல்லப்ப்ட்டார். இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்தது.

இதற்கிடையில், ஈரானின் ராக்கெட், அணு ஆயுத தயாரிப்பு மற்றும் சுலைமானியின் இருப்பிடம் குறித்த தகவல்களை அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ-வுக்கு ரகசியமாக அளித்ததாக ரிசா அஸ்ஹரி மற்றும் முஹ்மத் மைஸ்வி மஜித் ஆகிய இரு ஈரானியர்களை அந்நாட்டு அரசு கைது செய்தது.



கைது செய்யப்பட்ட இருவரும் பணத்திற்காக அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ-க்கு ரகசிய தகவல்களை அனுப்பியது உறுதியாகியுள்ளதாக ஈரான் நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பையடுத்து முதல் நபராக ரிசா அஸ்ஹரிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. மேலும், மற்றொரு 
குற்றவாளியான மஜித்துக்கு கூடிய விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக ஈரான் நாட்டில் பலருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News