செய்திகள்
கொரோனாவில் இருந்து அமித்தாப் பச்சன் விரைவில் குணமடைய நேபாள பிரதமர் வாழ்த்து
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து அமித்தாப் பச்சனும் அவரது குடும்ப உறுப்பினர்களும் விரைவில் குணமடைய நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காத்மண்டு:
பாலிவுட் நடிகர் அமித்தாப் பச்சனுக்கு நேற்று இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் இன்று அதிகாலை கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பச்சன் குடும்பத்தினர் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டனர். அந்த பரிசோதனையில், பாலிவுட் நடிகையும் அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்த பரிசோதனையில் அமித்தாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு கொரோனா பரவவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
வைரஸ் உறுதி செய்யப்பட்ட பச்சன் குடும்பத்தினர் அனைவரும் தற்போது மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் பூரண குணமடைந்து வீடு திரும்ப அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமித்தாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் உள்பட குடும்பத்தின் அனைவரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’இந்தியாவின் பழப்பெரும் நடிகர் அமித்தாப் பச்சனும் அவரது குடும்பத்தினரும் வைரஸ் பாதிப்பில் இருந்து விரைவில் பூரணமாக குணமடைய வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.