செய்திகள்
ஹாங்காங்கில் மாணவர்கள் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட தடை

ஹாங்காங்கில் மாணவர்கள் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட தடை

Published On 2020-07-10 04:37 GMT   |   Update On 2020-07-10 04:37 GMT
ஹாங்காங்கில் பள்ளி மாணவர்கள் எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபட தடை விதித்து உத்தரவு போடப்பட்டுள்ளது.
ஹாங்காங் :

இங்கிலாந்து தனது பிடியில் இருந்த ஹாங்காங்கை கடந்த 1997-ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைத்தது. ஒரே நாடு இரண்டு அமைப்புகள் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் சில உரிமைகளை ஹாங்காங் மக்களுக்கு வழங்குவதற்கு குறைந்தது 50 ஆண்டுகளுக்கு சீனா உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

ஆனால் சீனா அவ்வாறு நடந்துகொள்ளாமல் ஹாங்காங் மக்களின் தன்னாட்சியை பறிக்கிற வகையில் நடந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டம் ஒன்றை சீனா அமல்படுத்தி உள்ளது. இது உலக நாடுகளின் எதிர்ப்புக்கு வழிவகுத்தது.

அந்த சட்டத்தின்படி, ஹாங்காங்கில் நேற்று முன்தினம் தேசிய சீன பாதுகாப்பு அலுவலகம் திறக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அங்கு பள்ளி மாணவர்கள் எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபட தடை விதித்து உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, மாணவர்கள் பாடல்கள் பாடுவது, கோஷங்கள் போடுவது, வகுப்பறைகளை புறக்கணிப்பது உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கையிலும் இனி ஈடுபட முடியாது என்று பிரதேச கல்வி மந்திரி கெவின் யியுங் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஹாங்காங் நூலகங்களில் இருந்து ஜனநாயக ஆதரவு புத்தகங்கள் அகற்றப்பட்ட நிலையில், இப்போது மாணவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News