செய்திகள்
கோப்பு படம்

கடந்த ஒரு வாரமாக தினமும் புதிதாக 1 லட்சம் 60 ஆயிரம் பேருக்கு கொரோனா - அதிர்ச்சி தகவல்

Published On 2020-07-01 21:15 GMT   |   Update On 2020-07-01 21:15 GMT
உலகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக தினமும் புதிதாக 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜெனிவா:

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதற்கிடையில், தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 1 கோடிக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 58 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 லட்சத்து 17 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் தலைவர்
டெட்ரோஸ் ஆதனாம் கூறுகையில், ’’கடந்த ஒரு வாரமாக தினமும் புதிதாக 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. 

உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கையில் 60 சதவிகிதம் கடந்த ஒரு மாதத்தில் உறுதி செய்யப்பட்டவர்கள்’’ என அவர் தெரிவித்துள்ளார்.   

Tags:    

Similar News