செய்திகள்
கராச்சி தாக்குதலுக்கு பின்னால் இருப்பது இந்தியா தான் - சொல்கிறார் இம்ரான்கான்
கராச்சியில் பங்குச்சந்தையில் நடந்த தாக்குதலுக்கு பின்னால் இருப்பது இந்தியா தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்திற்குள் கடந்த திங்கள் கிழமை ஆயுதங்களுடன் அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர், துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 5 பாதுகாப்பு காவலர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்,
இந்த தாக்குதலுக்கு பலூசிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு ஏற்கனவே பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில், கராச்சி தாக்குதலுக்கு பின்னால் இருப்பது இந்தியா தான் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் பேசிய இம்ரான் கான்,’’ மும்பையில் (மும்பை தாக்குதல்) என்ன நடந்ததோ அது இங்கும் நடக்க வேண்டும் என அவர்கள் (இந்தியா) நினைக்கிறார்கள். நாட்டில் நிலையற்ற தன்மை ஏற்பட வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
இந்த தாக்குதலுக்கு பின்னால் இருப்பது இந்தியாதான் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.