செய்திகள்
மெக்சிகோ: போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே மோதல் - 16 பேர் பலி
மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே நடந்த மோதலில் 16 பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள்களை கடத்தும் செயலில் ஈடுபட்டு வரும் இந்த கடத்தல் கும்பல் குழுக்களாக செயல்பட்டு வருகின்றன.
போதைப்பொருள் கடத்தல்கள் தொழில் ரீதியில் போட்டியை உருவாக்கி இந்த குழுக்களுக்கிடையே அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் வெடிக்கின்றன. இதில் பல கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் சினலோயா மாகாணம் டிபுஜி என்ற பகுதியில் இரு தரப்பு கடத்தல் கும்பல்களுக்கு இடையே நேற்று இரவு பயங்கர மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.
இந்த மோதல் சம்பவத்தில் இரு தரப்பையும் சேர்ந்த கடத்தல்காரர்கள் மொத்தம் 16 உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இந்த துப்பாக்கிச்சண்டை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.