செய்திகள்
இஸ்ரேல் பாராளுமன்ற கூட்டத்தொடர்

இஸ்ரேலில் எம்.பி.க்கு கொரோனா- பாராளுமன்ற கூட்டத்தொடர் சஸ்பெண்ட்

Published On 2020-06-05 02:52 GMT   |   Update On 2020-06-05 02:52 GMT
இஸ்ரேல் நாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாராளுமன்ற கூட்டத் தொடர் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜெருசலேம்:

இஸ்ரேல் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த நிலையில், கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பத் தொடங்கி உள்ளது. சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பல்வேறு இடங்களில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. புதிய நோய்த்தொற்று காரணமாக 40க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சமி அபு ஷாகாதேவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாராளுமன்ற கூட்டத்தொடர் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. நேற்று நடைபெறுவதாக இருந்த பாராளுமன்ற குழு கூட்டங்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.

அத்தியாவசிய பணிகள் இருந்தால் மட்டுமே பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்கள், ஊழியர்கள் வரவேண்டும் என்றும், மற்றவர்கள் வீடுகளில் இருந்தபடியே பணிகளை கவனிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுமார் 90 லட்சம் மக்கள் தொகை கொண்ட இஸ்ரேலில் இதுவரை 17343 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 290 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News