செய்திகள்
போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்

வெள்ளை மாளிகை அருகே போராட்டக்காரர்கள் - போலீஸ் மோதல்: கட்டிடங்களுக்கு தீவைப்பு

Published On 2020-06-01 04:22 GMT   |   Update On 2020-06-01 04:22 GMT
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநில தலைநகரான மினியாபொலிஸ் நகரத்தில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்பவர், போலீஸ் அதிகாரிகளின் பிடியில் கொல்லப்பட்டார். இது தொடர்பாக வெளியான வீடியோவில், கார் டயருக்கு அடியில் அவர் சிக்கி இருந்ததும், அவரது கழுத்தில் ஒரு போலீஸ் அதிகாரி தனது முழங்காலால் நெரித்ததும், அவர் மூச்சு விட முடியவில்லை என கதறியதும் காட்சிகளாகி இருந்து.

அவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கருப்பின மக்கள் ஆவேசமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களின்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள் வெடித்துள்ளன.



லாஸ் ஏஞ்சல்ஸ், பிலடெல்பியா மற்றும் அட்லாண்டா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வெள்ளை மாளிகை முன்பும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை வெள்ளை மாளிகை முன்பு மீண்டும் ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலில் போராட்டக்காரர்கள்  அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் இரவு 11 மணி முதல் திங்கள் காலை வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மேயர் அறிவித்தார். இதனால் போராட்டக்காரர்கள் மேலும் ஆத்திரமடைந்து இரவிலும் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

அவர்களை போலீசார் வெளியேற்ற முயன்றதால் வன்முறை வெடித்தது. போலீஸ்காரர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. பல்வேறு இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடைபெறுகின்றன. இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளிக்கிறது. 
Tags:    

Similar News