செய்திகள்
கைது செய்யப்பட்ட போலீஸ்காரர்

விசாரணைக்கு அழைத்துச் சென்ற கருப்பின இளைஞர் மரணம் - அமெரிக்கா போலீஸ்காரர் கைது

Published On 2020-05-29 18:53 GMT   |   Update On 2020-05-29 18:53 GMT
அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற கருப்பின இளைஞரின் மரணத்துக்கு காரணமான போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் உள்ள சாலையில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை சென்று கொண்டிருந்தார். அவர் ஒரு உணவகத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருபவர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கி, கையில் விலங்கு மாட்டி விசாரித்தனர்.

தான் ஒரு அப்பாவி என கூறியதையும் கேட்காத ஒரு போலீஸ்காரர், அவரை தரையில் குப்புறத் தள்ளி கால் முட்டியால் கழுத்தை அழுத்தினார். இதில் அவர் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து, மின்னபோலீஸ் நகரில் கருப்பின மக்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தற்போது நடத்தப்பட்ட விசாரணையில், ஜார்ஜ் மீது எந்தக் குற்றமும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், ஜார்ஜ் பிளாய்டு இறப்பிற்கு காரணமான டெரக் சாவின் என்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் நிறவெறி அதிகரித்து வருவதையே இச்சம்பவம் காட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News